நடிகர் ‘பருத்திவீரன்’ சரவணன் கட்டியுள்ள விநாயகர் கோயில் !
ஒரு காலத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி சில படங்களில் நடித்தவர் சரவணன். மறுபிரவேச வாய்ப்பாக அமைந்த 'பருத்திவீரன்' படத்திற்குப் பிறகு அந்தப் பாத்திரத்தின் வெற்றியால் பெயரே 'பருத்திவீரன்' சரவணன் என்றானது. அதன் பிறகு ஏராளமான படங்களில் நடித்தார்; நடித்தும் வருகிறார். எதிர்மறை மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்து வரும் அவர், தனக்கென ஒரு பாதை அமைத்துக் கொண்டு பயணித்து வருகிறார்.
அண்மையில் வெளியான 'சட்டமும் நீதியும்' இணையத் தொடர் சரவணன் வாழ்க்கையில் அமைந்த ஒரு மைல் கல் எனலாம். அந்த அளவுக்குத் தனது பண்பட்ட நடிப்பை அதில் வெளிப்படுத்தி இருந்தார்.
நடிகர் சரவணன் ஒரு விநாயகர் கோவிலை சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டம், வட்டக்காடு என்கிற ஊரில் கட்டி இருக்கிறார் .
தனது தோட்டத்தில் எழுந்து அருள்பாலிக்கும் விநாயகராக அதை வணங்கி வந்தவர், தற்போது அதற்காக ஓர் ஆலயம் கட்டி இருக்கிறார்.
...









