அந்தகன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக பிரஷாந்த் 55 என்று பெயரிடப்பட்டுள்ளது.
அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, என சூடு பறக்கும் விதமாக, சமரசமற்ற பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ள, இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க உள்ளார் இயக்குனர் ஹரி.
23 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் ஹரி மற்றும் பிரஷாந்த் இருவரும் இந்த புது படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார்கள், இதற்குமுன் 2002 ஆண்டு வெளிவந்த தமிழ் படத்தில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் பிரஷாந்த் நாயகனாக நடித்து இருந்தார். அந்த தமிழ் படம்தான் இயக்குனர் ஹரி இயக்கிய முதல் படமாகும் .அவரது அறிமுக படமான ‘தமிழ்’ மிகப் பெரிய வெற்றி அடைந்து வசூலை வாரிக் குவித்தது, அனைவரும் அறிந்ததே. பட்டி தொட்டி எங்கும், திரை அரங்கில் நூறு நாட்களுக்கு மேலாக ஓடி, சாதனை படைத்தது. அதன் பின் இயக்குனர் ஹரி, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்ததோடு, தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே இயக்கி, தான் ஒரு வெற்றி இயக்குனர் என தனி முத்திரை பதித்தார்.
தமிழ் சினிமாவின் பல முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் இந்த படத்தில், பெரும் நட்சத்திர பட்டாளமே இருக்கும் எனவும், பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் இணைய உள்ளார்கள் எனவும் படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
நடிகர் பிரஷாந்த்தின் பிறந்த நாளான ஏப்ரல் 6, இன்று இந்த படத்தின் (பிரஷாந்த் 55) அறிவிப்பு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியானது. ஸ்டார் மூவிஸின் சார்பாக இப்படத்தை நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் அவர்கள் தயாரிக்கிறார்.
