நடிகர் அஜித்குமாரின் நடிப்பில் வெளியான ‘அமர்க்களம்’ திரைப்படம் ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. அஜித்குமாரின் 25 ஆவது திரைப்படமான ‘அமர்க்களம்’ ஆக்ஷன், காதல் மற்றும் உணர்வுப்பூர்வமான பல தருணங்கள் என தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனியிடம் பிடித்துள்ளது.
பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக தற்போது வெளியாகியுள்ள படத்தின் புதிய டிரெய்லர் பல அழகிய தருணங்களைக் கொண்டுள்ளது. ஆன்-ஸ்கிரீனில் மலர்ந்த அஜித் மற்றும் ஷாலினியின் காதல் நிஜ வாழ்க்கையிலும் சாத்தியமாகியதால் ரசிகர்களுக்கும் இந்தப் படம் ஸ்பெஷலான ஒன்று. படம் அஜித்-ஷாலினியின் திருமண நாளன்று மீண்டும் வெளியாவது கூடுதல் சிறப்பு. ஸ்பேரோ சினிமாஸ் கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை தமிழகமெங்கும் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்கிறார்.
தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய டிரெய்லர் பல உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் படத்தை மீண்டும் பார்க்க இருக்கும் ரசிகர்களுக்கு கூட புது அனுபவத்தை தரும் வகையில் அமைந்துள்ளது. இந்த டிரெய்லர் ஆக்ஷனை மட்டும் மையமாக மட்டுமே கொள்ளாமல், கதையின் உணர்ச்சி ஆழத்தையும் காதலையும் முன்னிறுத்தி வெளியாகியுள்ளது. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பம்சங்களில் ஒன்று அஜித்குமார் மற்றும் மறைந்த திறமையான நடிகர் ரகுவரன் இருவருக்கும் இடையிலான ஃபேஸ்- ஆஃப் காட்சிகள்.
பரத்வாஜ் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ஹிட். குறிப்பாக, எவர்கிரீன் டிராக்கான ‘உன்னோடு வாழாத’ பாடல் இப்போதும் பல காதலர்களுக்கு காதல் கீதம். துள்ளல், ஆத்மார்த்தமான மெலோடிஸ் மற்றும் உணர்வுப்பூர்வமான பாடல்கள் என படத்தின் ஆல்பம் இப்போதும் இசை ஆர்வலர்கள் மத்தியில் தனியிடம் பிடித்துள்ளது.
டிரெய்லருக்கு கிடைத்துள்ள பாசிட்டிவான ரெஸ்பான்ஸை அடுத்து ஏப்ரல் 24 அன்று மறுவெளியீடு செய்யப்படும் ‘அமர்க்களம்’ படம் பழைய ரசிகர்களுக்கு நினைவுகளை மீட்டெடுக்கும் அனுபவமாகவும், இன்றைய தலைமுறைக்கு புதிய அனுபவமாகவும் அமையும்.
