Monday, April 20

யாதும் ஊரே யாவரும் கேளிர் -விமர்சனம்

கணியன் பூங்குன்றனார் என்கிற புலவரால் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புறநானுறு பாடலின் முதல் வரி யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகும் இது அனைத்து ஊரும் நம் ஊரே, அனைத்து மக்களும் நமது உறவினர்களே. உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் உள்ளது இந்த புகழ் பெற்ற வரியினை படத்தின் தலைப்பாக்கி அதன் மூலம் ஈழத் தமிழர்களின் வாழ்க்கை இன்னல்களை பற்றிய கதைக்களத்தை கொண்டு உருவாகி வெளியாகியுள்ள படம் யாதும் ஊரே யாவரும் கேளிர்

இலங்கை தமிழரான விஜய் சேதுபதி. 18 ஆண்டுகளுக்கு பின் , கிருபாநிதி என்ற பெயரில் கொடைக்கானலுக்கு வருகிறார் ,கதையின் நாயகனான ,அவர் அங்கு ஒரு தேவாலயத்தில் உள்ள இசைக் குழு மற்றும் பாதிரியாரிடம் (விவேக்) தன் பெயர் புனிதன் என்று கூறி அறிமுகமாகிறார், அந்த தேவாலயத்துக்கு வரும் மேகா ஆகாஷோடு காதல் கொள்ளும் அவர் தனது அடையாளத்தை மறைக்கிறார். மறுபுறம் காவல்துறை அதிகாரியாக வரும் இயக்குநர் மகிழ் திருமேனி ,விஜய்சேதுபதியை கொல்ல நினைக்கிறார்,இசைத்துறையில் சாதனைகளை படைக்கவேண்டும் வேண்டும் என்ற கிருபாநிதிக்கும்( விஜய் சேதுபதி) காவல்துறை அதிகாரியான மகிழ் திருமேனிக்கும் எந்த வகையில் இணைப்பு ?அதன் பின் என்ன நடந்தது ? என்பதே மீதி கதை

வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இயக்கியுள்ள படம் இது, இவர் மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர்,இந்தப்படம் உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்களின் வாழ்வியல் போராட்டங்களை, அவர்களின் வலிகளை, முழுமையாக சொல்லாவிடினும் சொல்ல வந்த முயற்சியில் ஓரளவுக்கு வெற்றி கண்டுள்ளது என்று சொல்லலாம்

கதையின் நாயகனாய் கிருபாநிதி என்ற புனிதன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் கிளைமாக்ஸ் காட்சியில் வசனம் பேசும் காட்சி தவிர மற்ற காட்சிகளில் எப்பவும் போல தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர் தவிர படத்தில் கனிகா ,மேகா ஆகாஷ், கரு பழனியப்பன்,மகிழ் திருமேனி , ராஜேஷ், மோகன் ராஜா, கரு.பழனியப்பன், சின்னி ஜெயந்த், போன்றோர் கொடுத்த வாய்ப்புக்கு ஏற்ற வகையில் நடித்துள்ளார்கள்,மறுபடியும் வெள்ளித்திரையில் மறைந்த நடிகர் விவேக்கை பார்க்கும் சந்தர்ப்பத்தை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்கள்.

ஒளிப்பதிவில் வெற்றி வேல் மகேந்திரன்,இசையில் நிவாஸ் கே. பிரசன்னா, கலை இயக்கத்தில் கே.வீரசமர் போன்றோரின் பங்களிப்பு பாராட்டக்கூடியது, சிலம்பரசன் பாடிய ‘முருகா’ பாடல் தனிகவனத்தை ஈர்க் கிறது .

நாம் வாழும் காலத்தில் வாழும் மக்களின் வாழ்வியலை சொல்லும் இந்த படம் வாயிலாக அடையாளங்களின்றி ,தன் சொந்த நாட்டை விட்டு , வேறு இடங்களுக்கு வாழ்வாதாரத்துகாக இடம்பெயரும் மனிதர்களின் இன்னல்களை நாமும் உணர்ந்து கொள்ளமுடிகிறது, மேலும் அவர்களின் வலிகள் மறைவதற்கான வழிகள் பிறக்க, இது போன்ற படைப்புகள் விழிப்புணர்வை தந்து உதவுமேயானால் அதுவே படைப்பாளிகளின் வெற்றியாகவும் கருதப்படும் .

Spread the love