150 ஆண்டுகள் புதைந்து கிடந்த ஒரு ரகசியம்… அதனை தோண்டி எடுக்கும் ஒரு கொலை விசாரணை… பெண்களின் உரிமைப் போராட்டத்தை த்ரில்லர் பாணியில் சொல்லும் முயற்சிதான் ‘ஆட்டி’.”

கொடைக்கானலின் மலைமூட்டமும், பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையும் பின்னணியாக அமைந்துள்ள இந்த திரைப்படம், கடந்த காலத்தில் பெண்கள் எதிர்கொண்ட அடக்குமுறைகள், பாலியல் அத்துமீறல்கள் மற்றும் அதற்கு எதிராக அவர்கள் நடத்திய போராட்டங்களை மையமாகக் கொண்டு நகர்கிறது.
மதுரை மாவட்டத்திலுள்ள கோடைமலை கிராமத்திற்கு பணிமாறுதலாக வரும் போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன், சட்டத்திற்கு அப்பாற்பட்ட அநீதிகளை சகித்துக் கொள்ளாத அதிகாரி. அந்த கிராம பள்ளியில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர் ஒருவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இந்த வழக்கை விசாரிக்க களமிறங்கும் இசக்கி கார்வண்ணனுக்கு ஆரம்பத்தில் எந்த விதமான தடயமும் கிடைக்கவில்லை.தொடர் விசாரணை மதுரையில் உள்ள பல்கலைக்கழக ஆய்வுகள் வரை நீளும் போது, தற்போதைய கொலைக்கும் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சில அதிர்ச்சிகரமான சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. அந்த மறைக்கப்பட்ட வரலாறு என்ன? கொலைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? என்பதற்கான பதில்களை சஸ்பென்ஸ் கலந்த திரைக்கதையுடன் இந்த படம் முன் வைக்கிறது.
.படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பது சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு. கொடைக்கானலின் பசுமை சூழலையும் தேயிலைத் தோட்டங்களையும் திரையில் ரசிக்கும் வண்ணம் படமாய் காட்சி பதிவு செய்துள்ளது . ஒவ்வொரு ஃபிரேமும் கதையின் தன்மையை மேலும் பலப்படுத்துகிறது. தீசனின் பின்னணி இசை, காட்சிகளின் பதற்றத்தை பார்வையாளர்களிடம் துல்லியமாக கடத்த உதவியுள்ளது.. போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் இசக்கி கார்வண்ணன், கம்பீரமான உடல்மொழியுடனும், அளவான நடிப்புடனும் கவனம் ஈர்க்கிறார்.
அபி நட்சத்திரா தனது கதாபாத்திரத்திற்கு தேவையான உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் சுகுமார் அவ்வப்போது தோன்றி கதையின் அழுத்தத்தை குறைக்கும் வகையில் சிறிய நகைச்சுவை தருணங்களை வழங்குகிறார்.
இளங்கோவனின் படத்தொகுப்பு இன்னும் சற்று கூர்மையாக இருந்திருந்தால், திரைக்கதையின் வேகம் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். அதேசமயம் கலை இயக்கம் மற்றும் ஒப்பனைப் பணிகள் காலகட்டத்தின் உணர்வை நம்பகமாக உருவாக்க உதவியுள்ளன..
**பெண்களின் உரிமைப் போராட்டத்தை வெறும் கருத்தாக மட்டும் இல்லாமல், ஒரு மர்மக் கொலை விசாரணையுடன் இணைத்து சொல்ல முயற்சித்திருப்பது ‘ஆட்டி’ படத்தின் தனிச்சிறப்பு. சில குறைகள் இருந்தாலும், மறக்கப்பட்ட வரலாற்றின் குரலை த்ரில்லர் வடிவில் பார்க்க செய்யும் முயற்சிக்காக இந்த படத்தை ஒருமுறை பார்க்கலாம்.**
மொத்தத்தில் இந்த ‘ஆட்டி’ *மர்மமும் வரலாறும் கலந்த பெண்களின் எதிர்ப்புக் குரலை பேசும் த்ரில்லர் திரை அனுபவம்!
