Friday, April 17

’சல்லியர்கள்’ திரைப்பட விமர்சனம்

மேதகு படத்தை இயக்கிய இயக்குனர் கிட்டுவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இந்த “’சல்லியர்கள்’

போர்க்களத்தில் போர் நடைபெறும் சூழலில், களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்களின் பணியும், பங்களிப்பும் எந்த அளவிற்கு அவசியமானது என்பதை உணர்ச்சி பூர்வமாக திரைமொழியில் பதிவு செய்துள்ளது இந்த “’சல்லியர்கள்’ ,அப்படி போரினால் காயமடைந்த வீரர்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள இனத்தையோ, பிரிவியோ கருத்தில் எடுத்துக் கொள்ளாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வழங்கி உள்ளதை இந்த திரைப்படம் நேர்த்தியாக பதிவு செய்துள்ளது.

புலிகள் இயக்கத்தின் மருத்துவ பிரிவும், அவர்கள் அமைத்திருந்த பதுங்குழி மருத்துவமனைகள், அதில் களப்பணி ஆற்றிய மருத்துவர்களின் மனித நேயமும், இந்த படத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது.அப்படிப்பட்ட ஒரு பதுங்குழி மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒரு பெண் மருத்துவர் ஆன சத்தியதேவி தன்னுடைய மருத்துவப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறார், அவருடன் மருத்துவர் மகேந்திரனும் மருத்துவ சிகிச்சைகளை செய்து வருகிறார். இது போன்ற மருத்துவ சிகிச்சை தரும் மருத்துவமனைகளையும் அதன் உறுப்பினர்களையும் அழித்து ஒழித்து விட திட்டமிட்டுகிறது சிங்கள ராணுவம் .ஆனால் அங்குள்ள மருத்துவர்கள், உயிருக்கு போராடுபவர்கள், தம் குழுவினராக இருந்தாலும், எதிரி முகாமில் இருப்பவர்களாக இருந்தாலும் இருவரையும் ஒரு வாறாகவே பாவித்து, தங்களது மருத்துவ சேவையினை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இந்தப் படத்தில் கதையின் நாயகியாக டாக்டர் நந்தினி என்னும் கதாபாத்திரத்தில் சத்தியதேவி நடித்துள்ளார். கதைக்களம் நடந்த பகுதியில் பணியாற்றிய ஒரு மருத்துவரின் உணர்வுகளை தன்னுடைய நடிப்பின் மூலம் அழகாக வெளிப்படுத்தி உள்ளார். அதேபோல ,மற்றும் ஒரு மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்க கூடிய மகேந்திரன் ,செம்பியன் என்னும் கதாபாத்திரத்தில், தன்னுடைய யதார்த்தமான நடிப்பினை நன்கு பதிவு செய்துள்ளார். மற்றும் சேது கருணாஸ், களவாணி புகழ் திருமுருகன், நாகராஜ் போன்றவர்களும் அவரவர்கள் கதாபாத்திரங்களில் குறை காண இயலாத அளவிற்கு நிறைவான நடிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார்கள்.

உணர்வுபூர்வமான காட்சிகளை உயிரோட்டத்துடன் படமாக்கி உள்ள ஒளிப்பதிவாளர் சிபி சதாசிவத்தின் பங்களிப்பு ,அக்கால சூழலுக்கு நம்மை அழைத்துச் செல்லும் விதத்தில் உள்ளது .கென் கருணாஸ் மற்றும் ஈஸ்வர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளன .இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் தி .கிட்டு .போர் நடந்த காலத்தில் வாழ்ந்தவர்கள், கூட தெரியாத பல தகவல்களை திரைமொழியில் சிறந்த கதையோட்டத்துடன் , உணர்ச்சிபூர்வமான காட்சிகளுடன் படமாக பதிவு செய்துள்ளார்.

மொத்தத்தில் “’சல்லியர்கள்’அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

Spread the love