முதல் மரியாதைக்கு
இறுதி மரியாதை
– கவிப்பேரரசு வைரமுத்து

பிதாமகனே
போய்விட்டாயா?
கிராமத்து ராஜாவே
இறந்துபட்டாயா?
எங்கள்
மண் வாசனையில்
இன்று சாவு மணக்கிறதா?
அடைத்துக் கிடந்த
திரையுலகக் கதவுகளைத்
திறந்தவெளிக்குத்
திறந்துவிட்டவனே!
ஆகாயத்திற்கு அடுத்து
அதிக நட்சத்திரங்களை
அறிமுகம் செய்தவனே!
என்னையும்
சுயமரியாதையோடு
சுடரொளி வீசச்செய்தவனே!
உடன்பிறப்பே
ரத்தத்தின் ரத்தமே என்ற
தலைவர்களின் மொழிக்கு இணையாக
என் இனிய தமிழ்மக்களே
என்ற ரத்தினச் சொற்களுக்கு
முத்திரை சேர்த்தவனே!
நீ மாயக்காரன்
புழுதியைப் பொன்செய்தாய்
சினிமாவின் நிறம்
வெள்ளையென்று இருந்ததை
கருப்பென்று மாற்றிய
கலையாளன் நீ!
இடிந்த சுவர்களும்
உடைந்த மனிதர்களும்
கிழிந்த வாழ்க்கையும்
உன் கலையின் கச்சாப் பொருட்கள்
இந்தக் கரட்டுப்பட்டியைத்
தில்லி நகரத்திற்கு கொண்டுசேர்த்த
அல்லிநகரத்து அரசன் நீ
இனி நான் எப்படித்
தனியாகத் தேனி போவேன்?
மேற்குத் தொடர்ச்சி மலை
அருவிகளால் அழுதுகொண்டேகேட்குமே…
எங்கே பாரதிராஜா?

கத்தாழங்காட்டுக்
கரிச்சான் கேட்குமே…
எங்கே பாரதிராஜா?
கருவேலமரம் கேட்குமே
எங்கே பாரதிராஜா?
என்ன பதில் சொல்வேன்?
எப்படிநான் தனித்திருப்பேன்?
நீ தூரிகை
நான் வண்ணம்
நான் தூரிகை
நீ வண்ணம்
தூரிகை இல்லாமல் வண்ணமும்
வண்ணம் இல்லாமல் தூரிகையும்
என்னத்துக்காகும்?
நீ அரிவாள்
நான் கைப்பிடி
நான் அரிவாள்
நீ கைப்பிடி
அரிவாள் இல்லாத கைப்பிடியும்
கைப்பிடி இல்லாத அரிவாளும்
என்னத்துக்காகும்?
என்னை அழவிடு
உடம்பின் உப்பெல்லாம்
கண்ணீராய்க் கரையட்டும்
இனி என்ன எழுத?
நடிகர் திலகம் போல்
நானும் புலம்புகிறேன்
‘பூங்காத்து திரும்புமா?
எம் பாட்ட விரும்புமா?
பாராட்ட – மடியில் வச்சுத் தாலாட்ட
எனக்கொரு தாய்மடி கிடைக்குமா?’
முதல் மரியாதை செய்தவனே
உனக்கென் இறுதி மரியாதை
