Sunday, April 19

காந்தாரா Chapter 1- திரைவிமர்சனம்

2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கத்தில்  வெளியாகி, ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பினை பெற்ற படம் காந்தாரா ,தற்பொழுது இதன் முந்தைய பாகமான காந்தாரா சாப்டர் ஒன் வெளியாகி உள்ளது ,இந்தப் படத்தினை ரிஷப் ஷெட்டி இயக்கியுள்ளார்,ருக்மணி வசந்த், ஜெயராம், குல்ஷன் தேவய்யா மற்றும் பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம் தயாரித்துள்ளது. காந்தாரா படத்தின் முடிவிலிருந்து இந்த பாகத்தின் கதை தொடங்குகிறது.
காந்தாரா மலைப்பகுதிகளில் இருக்கும் ஒரு பூந்தோட்டத்தை கைப்பற்ற விரும்பும் மன்னனை அங்கே உள்ள தெய்வ சக்தி கொன்று விடுகிறது ,தந்தையின் மரணத்திற்கு பிறகு இளவரசன் அரசாட்சி செய்கிறான், அவனுக்கு குலசேகரன், கனகவதி என்ற வாரிசுகள் உள்ளனர், மீண்டும் காந்தாரா காட்டுக்குள் குலசேகரன் செல்கிறான், அங்குள்ள பழங்குடி மக்களும், அவனிடமிருந்து தங்கள் காட்டை காப்பாற்ற மன்னனின் படைகளுடன் மோதுகிறார்கள், காந்தாரா மக்களின் தலைவனாக இருக்கக்கூடிய பெர்மே தன் மக்களை பாதுகாக்கும் பொறுத்து என்ன செய்தார்? அதன்பின் என்ன நடந்தது ?என்பதே படத்தின் மீதி கதை.

பெர்மேவாக நடித்துள்ள ரிஷப் ஷெட்டி சிறப்பாக நடித்துள்ளார் ,நாயகனாக நடித்துள்ளதோடு இயக்குனராகவும் தனது அர்ப்பணிப்பான பங்களிப்பை இந்த படத்துக்காக அவர் கொடுத்திருக்கிறார். ஆக்சன் காட்சிகளிலும், கடவுள் அவருக்குள் நுழையும் காட்சிகளும் நன்றாக அமைவதற்கு அவரது சிறப்பான நடிப்பு மிகவும் உறுதுணையாக அமைந்துள்ளது.   மற்றும் ஜெயராம், இளவரசி கனகவதி ஆக ருக்மிணி வசந்த். இருவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக அமைந்து, நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் தன்னுடைய கைவண்ணத்தில், கலைவண்ணம் மிளி ரும் வண்ணம் சிறப்பாக அமைத்து பாராட்டினை பெறுகிறார் ஒளிப்பதிவாளர் அர்விந்த் S . காஷ்யப், அதேபோல படத்தில் இடம்பெற்றுள்ள கிராபிக்ஸ் காட்சிகளும் தரமான தொழில்நுட்பத்துடன் நம்பகத்தன்மையுடன் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.

கதை நடக்கும் இடத்திற்கு ரசிகர்களை அழைத்துக் கொண்டு போய், அவர்களை ஆச்சரியப்படுத்தும் கற்பனை உலகத்துக்குள் பிரமிக்க வைத்துள்ளார் கலை இயக்குனர் தரணி கங்கேபுத்திரா.இசையமைப்பாளர் அஜநீஷ் லோக்நாத்தின் இசையில் பாடல்கள் தனித்தன்மையுடன் ரசிக்கும்படி உள்ளன, அதேபோல செவிகளுக்கும் விருந்து கிடைக்கும் வகையில் பின்னணி இசையினையும் நன்கு அமைத்துள்ளார் .

நேர்த்தியான தொழில்நுட்ப கலைஞர்கள், கதாபாத்திரங்களுக்கு முற்றிலும் பொருந்தக்கூடிய நட்சத்திர தேர்வு , விறுவிறுப்பான திரைக்கதை காட்சியமைப்புகள் அதனோடு பார்வையாளர்களை தெய்வீகமும் சக்தியும் நிறைந்த பண்டைய உலகத்துக்குக் அழைத்துக்கொண்டு கொண்டு செல்லும் படைப்பாக உருவாக்கி ரசிகர்களுக்கு திரைவிருந்தாக்கியுள்ளார் ரிஷப் ஷெட்டி .

Spread the love