Thursday, June 18

‘சாமானியன்- திரைப்பட விமர்சனம்

சங்கர நாராயணனும் (ராமராஜன்) மூக்கையாவும் (எம்.எஸ்.பாஸ்கர்) கிராமத்திலிருந்து சென்னைக்கு, அவர்களது நண்பர் ஃபஸில் பாயோட (ராதாரவி) இல்லத்துக்கு விருந்தினர்களாக வருகிறார்கள்.அடுத்த நாளில் நகரின் பிரபல வங்கி ஒன்றின் உள்ளே வெடிகுண்டுடன் செல்லும் சங்கர நாராயணன் அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதோடு வங்கி ஊழியர்களையும் ,வாடிக்கையாளர்களையும் பிணைக் கைதிகளாக்குகிறார். அவருக்கு அவரது நண்பர்களான எம்.எஸ்.பாஸ்கரும், ராதாரவியும் உதவி செய்கின்றனர்.இவர்களின் இந்தச்செயலுக்கு பின்புலம் என்ன? பிணைக்கைதிகளை மீட்க காவல்துறை நடவடிக்கை எடுத்ததா? இறுதியில் என்ன நட ந்தது?இது போன்ற பல வினாக்களுக்கு விடை சொல்லுகிறது ‘சாமானியன்’.படத்தின் மீதி கதை


13 ஆண்டுகள் திரைஉலக வனவாசம் முடித்து மீண்டும் திரை வானில் கதையின் நாயகனாய் ‘ வலம் வர வந்துள்ள ‘மக்கள் நாயகன்’ நடிகர் ராமராஜன் சங்கர நாராயணன் என்னும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார், எத்தனை கோடி கொடுத்தாலும் வில்லனாக நடிக்கமாட்டேன் என்றும் ,குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்காமல் நாயகனாய் மட்டுமே நடிப்பேன் என்றும் உறுதியாய் காத்திருந்த அவரின் காத்திருப்பு வீணாகாத வகையில், இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் நன்கு வடிமைக்கப்பட்டுள்ளது . மூக்கையா கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கரும், ஃபஸில் பாயாக ராதாரவியும் சிறப்பாக நடித்து, தங்களது அனுபவ நடிப்பை நன்கு வெளிபடித்தியுள்ளார்கள் மேலும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், போஸ் வெங்கட், மைம் கோபி, கஜராஜ் ,லியோசிவக்குமார், நக்‌ஷாசரண் போன்றவர்களும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ற வண்ணம் நன்கு நடித்துள்ளார்கள்

ஏராளமான படங்களில் வெற்றிக்கூட்டணியாக திரைவலம் வந்த ராமராஜன் -இளையராஜா காம்போ, பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் இணைந்து இருப்பது படத்துக்கு கூடுதல் பலம் தருகிறது. நடுத்தர குடும்பங்கள் தங்களுடைய வங்கிக்கடனால் படும் சிரமங்களை பதிவு செய்யும் வகையில் இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் இராகேஷ். படத்தின் இரண்டாம் பாதியில் இளம் வயது ராமராஜனை கார்ட்டூன் கதாபாத்திரம் வழியே வெளிப்படித்தியிருப்பது மிகவும் சிறப்பானது. ஒளிப்பதிவாளர் சி.அருள் செல்வனும் ,படத்தொகுப்பாளர் ராம் கோபியும் இயக்குனருக்கு பக்கபலமாய் அமைந்துள்ளார்கள்.

மாறுபட்ட கதையில், புதிய பரிமாணத்தில் மீண்டும் திரைவலம் வந்துள்ள ராமராஜனுக்கு இந்த சாமானியன் மீண்டும் பலப்படங்களில் அவரை பார்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்று நம்பலாம்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள் ,சாமானியர்களுக்கும் அது பொருந்தும் என்புது உண்மை .

Spread the love