இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இதில் ‘வைகைப்புயல்’ வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் ‘குக் வித் கோமாளி’ புகழ் நடிகை சிவாங்கி, ‘டாக்டர்’ பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தப் படத்திற்காக அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் லண்டனில் பாடல்களை உருவாக்கி வருகிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் வைத்துக்கொள்ள படக்குழுவினர் விரும்பினர். இதனை ஏற்றுக்கொண்ட லைகா நிறுவனம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்தது. அங்குள்ள பிரத்யேக பதிவரங்கத்தில் படத்திற்கான பாடல்களை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், படக்குழுவினருடன் கலந்துரையாடி உருவாக்கினர். இதன்போது படத்தின் தயாரிப்பாளரும் , தொழிலதிபருமான லைகா குழும உரிமையாளர் சுபாஷ்கரன், அந்நிறுவனத்தின் துணை தலைவர் பிரேம், அந்நிறுவனத்தின் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி G.K.M தமிழ்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.
உலகளாவிய தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த ‘வைகைப்புயல்’ வடிவேலு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக நடிப்பதாலும், அவர் இந்த படத்தில் பாடுவதாலும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு வெளியான பல படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாலும் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் பாடல்களுக்கும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.